’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல்


அரபு சீமையிலே... - 25

Posted: 01 Nov 2010 10:10 AM PDT

பத்தாண்டு முடிந்தது நபித்துவம் பெற்று
புத்தாண்டுக்கு முந்தய துல்ஹஜ் வந்தது
ஹஜ்ஜுக்குக் கூடிய மக்களில்
பசுந்தானியம் விளையும்
பழத்தோட்டங்களும்
கனிந்த பேரிச்சையும்
தெளிந்த நீரோடையும் நிறைந்த
யத்ரிப் நகரத்து யாத்ரிகர்கள்
குழுமினர்.
மினாவுக்கு அருகில்
அவர்தம் கூடாரம் – சென்று
நபிகளார் செய்தார்
பிரச்சாரம்.

நல்லொழுக்க மக்கள் பலர்
முன்னொழுகி வந்ததனால்
மார்க்கமருகி போனது,
தீர்க்கதரிசி ஏற்றது!
பூசல் பிணக்கு ஒழிந்திட
வாசலாக அமைந்தது!
நாசவேலை குறைந்திட
நாளும் பொழுதும் பிறந்தது!!

அவ்ஸ், கஸ்ரஜ் என்று
கோத்திரம் இரண்டு!
கோத்திரத்துக்குள்ளே
சாத்திரம் நூறு!! – அதனால்
ஆத்திரம் பலமடங்கு!
சாத்தியம் உணர்ந்து நபிகள்(ஸல்)
சாதகமாக்க,
வேற்றுமை மறந்து வெற்றியும் கிடைத்தது!

அஸ்அத், அவ்பு, ரபீஆ,
குத்பா, உத்பா, ஜாபிர்
என அறுவரும்
இஸ்லாத்தை பெறுவராய்,
எடுத்துவைத்த தூதுவத்தை
நபிகளாரின் மாதவத்தார்,
சிரமேற்றுக் கொண்டார்கள்;
பெருவாழ்வு கண்டார்கள்!
அடியொற்றி பலரும்
இறைவனது சந்நிதியில்
முடிதாழ்த்தி நின்றார்கள்!
பூமிதனில் இஸ்லாம்
கொடியேந்தி நின்றதுவே!
விடியலுக்குக் காத்திருந்த
வியனுலக நாயகரும்
படிப்படியாய் பாங்குடனே
இஸ்லாத்தை எத்தி வைத்தார்!

இணை வைத்தல் பெரும்பாவம்,
விபச்சாரம் கைசேதம்,
பாலகரைக் கொல்லுவதும்,
பழி சொல்லித் தள்ளுவதும்
களவாண்டு செல்லுவதும்
பொய்புறங்கள் சொல்லுவதும்,
விலக்குவது அவசியம்!
இவை
இஸ்லாத்தின் அடித்தளம்!!
என்று சொல்லி கற்பித்தார்,
பாடங்களைப் படிப்பித்தார்!!

இறை வணக்கம் வேண்டும் – அதோடு
மறை வழியும் வேண்டும்.
மறு உலக விருப்பம்
உருவாக வேண்டும்!
நீதி, அன்பு, வாய்மை
ஆதி மனத்தூய்மை
தியாகத்துடன் அனுதாபம்
கொள்வதுதான் அனுகூலம்!
சீரிய இவை வாழ்வினிலே
ஊறிட இஸ்லாம் செழித்திடுமே!

முஸ்அப் பின் உமைர் பின் ஹாஷிம்
என்ற போதகரை திருமதினா அனுப்பிவிட,
இடம்தந்தார் ஜுராரா தம் இல்லத்தில்,
நடமிட்டார் யத்ரிப் மக்கள் உள்ளத்தில்…

இதமான பேச்சு பதமாக ஈர்க்க
இஸ்லாத்தின் தூது இனிதாக பரவ,
சிலைவணக்கம் ஒதுக்கி விட்டு,
அலைகடலாய் இணைந்தனர் மக்கள்.

ஸஅத் இப்னு மஆத் அல் நுஃமான்
என்பவரின் கிணற்றடியில்
நடந்தது தினமும் போதம்!
முழங்கியது உண்மை நாதம்!!
அது பிடிக்காத ஸஅத்,
உஸைத் பின் ஹுளைரை அனுப்பி,
அவர்களை வெளியேற்றச் சொன்னார்.

மகுடிக்கு மயங்கிய பாம்பென,
மலருக்கு மயங்கிய தேனியாக,
உஸைத்தை இஸ்லாம் ஈர்க்க
திருவசனத்தின் கவர்ச்சியில் கட்டுண்டார்!
கலிமாவைத் தானோதி தீன்கொண்டார்!!

மனமாற்றம் அறிந்த ஸஅத்,
சினமேற்று மனதில்,
இறைத்தூதை தடுக்கவென
தாமே சென்றார்…..
முறையான மொழியாலே
உளமாற்றம் பெற்றார்!
அதன் பயனால்,
அப்து அஷ்ஹல் கூட்டமே,
தீனின் தூணைப் பற்றிப் பிடித்தது!
இஸ்லாத்தின் சக்தி அங்கு தடித்தது!!

மக்காவில் எதிர்ப்பாய்
குரலெழுந்த போது,
மதினாவின் மக்கள்
திரள் திரளாய் வந்து,
ஒப்பற்ற சக்தியினை
உவந்தேற்றுக் கொண்டனரே!
ஒற்றுமையாய் ஒழுகிநின்று
சன்மார்க்கம் கண்டனரே!!

(வளரும்)

-சுமஜ்லா.


அரபு சீமையிலே... - 24

Posted: 01 Nov 2010 10:09 AM PDT

அப்போது,
யமன் மாகாணத் தளபதி,
அறிவிலும் செல்வத்திலும்,
ஆற்றலுலும் சிறந்த
துபைல் பின் அம்ரு அலி தவ்ஸி
குறைஷிகளை சந்திக்க,
என்பார் மக்கா வந்தார்.

அவரிடம்,
முஹம்மதைப் பற்றி முழுக்குறைகூறி
மூடிமறைத்து, பொய்பல உரைத்து,
அஞ்சாமல் அவதூறு சொல்லி,
அவர் காதை
பஞ்சால் மூடச்செய்தனர்.
விஞ்சாத வித்தகையால்,
அவர் மனதில்,
நஞ்சதனை விதைத்திட்டனர்.

தினம் மூன்று கழிந்த போது,
திருக்காபா ஓரத்திலே
தீன்குலத்தில் இனிய நாதம்
திருக்குர்ஆன் தந்த போதம்
காதுகளில் தானாக,
குரலினிமைத் தேனாக,
சொல்லோடும் சொல்தந்த சுவையோடும்,
கல்லூறும் கவியூறும் கலையோடும்,
காதினிலே பாயக் கண்டு,
மனமாற்றம் மாயம் கொண்டு
பஞ்சு வேலையற்று விழுந்தது!
நஞ்சர் கொடியங்கு வீழ்ந்தது!!

பதிலொன்று தேடியவர்,
அதிகாலை நேரத்திலே,
சதிவலையில் விடுபட்டு,
கதிமோட்சம் காணவென்று,
பெருமகனார் சந்நிதியில்,
பெருங்குரலில் அழலானார்.
திருக்கலிமா தனையோதி,
இறையவனைத் தொழலானார்.
ஊர்திரும்பிய துபைல் அவர்கள்,
தீன் எனும் மாலை அணியச்செய்தார்.
இஸ்லாத்தில் தாம் இணைந்ததோடு,
தம் மக்களையும் இணையச்செய்தார்.

நாளும் பொழுதும் கழிய
ஊரும் உறவும் பிரிய,
தனிமையிலே வாடி நின்றார்
தாஹா நபி ரசூல் அவர்கள்.

இல்லத்து சுடர் விளக்கு,
கதீஜாவை இழந்ததனால்,
உள்ளத்து உணர்வுகளை,
உரைக்க ஒரு துணை வேண்டி,
அருந்தோழர் அபூபக்கர்,
அருமை மகள் ஆயிஷாவை,
ஐநூறு திர்ஹம் மஹருக்கு,
அண்ணலார்க்கு மணமுடித்தார்.

சின்னஞ்சிறு சிறுமியவர்
சிறிதுகாலம் சென்றபின்னே,
அன்னவரின் துணையாக,
அழகாகப் பொருந்திக் கொண்டார்.

ஆயினும்,
இடைப்பட்ட காலத்திலே,
இல்லத்தேவை நிறைவேற்ற,
பொறுப்புமிக்க பெண்ணொருவர்
தேவையென்று தேடி வந்தார்.

உயர் குலத்து சீமாட்டிகள்
அவருக்காக தவங்கிடந்தும்,
சீமான் வீட்டுப் பிள்ளையெல்லாம்,
கோமான் நபியை ஈர்க்கவில்லை!

அது சமயம்,
சவ்தா என்பார்,
விதியால் வந்த உறவை இழந்து,
தீனால் சொந்த உறவைத் துறந்து,
பெற்றோரும் உற்றோரும்
உடன்பிறந்த மற்றோரும்,
ஆதரிக்க மறுத்ததனால்,
வேதனையில் துடித்தார்.
சின்னஞ்சிறு குழந்தையோடு
அநாதரவாய்த் தவித்தார்.
அவர்தம் நிலை கண்டு,
தத்தமது தேவை கொண்டு,
நானூறு திர்ஹம் மஹருக்கு,
நாயகியை மணம் கொண்டார்.

இல்லத்துப் பொறுப்பை அவர் ஏற்க
உள்ளத்துக் கவலை நீங்கியது!
மெல்ல மெல்ல தீன் பணியில்
முன்னேற்றமும் வந்தது!!
தாஹா நபியின் தூதுவத்தில்
தனியழகு மிலிர்ந்தது!
தரணியிலே பரணி பாட
புதுப்பாதைத் திறந்தது!!

(தொடரும்)

-சுமஜ்லா.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

மனைவியை மயக்குவது எப்படி?