
நீ வாடும் போது மருந்தாவேன்,
நீ கூடும் போது விருந்தாவேன்,
நீ தேடும் போது விளக்காவேன்
நீ பாடும் போது சுதியாவேன்!
வாசமுல்லைப் பூவாவேன்,
வைரமணிச் சுடராவேன்,
பேசும் பொம்மை போலாவேன்!
பைத்தியம்போல் காதல்கொள்வேன்!!
லைலாவைத் தேடிய மஜ்னு அங்கே,
மஜ்னுவை நாடும் லைலா இங்கே,
காணும் பொருளில் ஆசைமுகம்,
தூணும் துரும்பும் அவனுருவம்!
வசந்த காலக் கனவுகளில்
வந்தவன் எந்தன் மன்னவனே!
கசிந்து உருகி காதலிக்கும்
மங்கையின் மனதை யாரறிவார்?
பாதச் சுவட்டில் உந்தன்முகம்,
பச்சை மரத்தில் உந்தன்நிறம்!
காதல் கொண்ட மஜ்னுவுக்கு
கண்டது எல்லாம் லைலாவாம்!
நீ வாடும் போது மருந்தாவேன்,
நீ கூடும் போது விருந்தாவேன்!
நீ தேடும் இன்பத் தேவதையாய்,
கை போடும் போது அணைத்திடுவேன்!!
-சுமஜ்லா
.
.
கருத்துகள்